Skip to main content

"வீட்டுத் தனிமையில் இருப்பவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

mansukh mandaviya

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை தெரிவித்தது.

 

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், டெல்லி, லடாக், உத்தரப்பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மன்சுக் மாண்டவியா, இசஞ்சீவனி போன்ற தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்கும் திட்டங்களில் கவனம் செலுத்துமாறும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தீவிரமாக கண்காணிக்குமாறும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை எய்ம்ஸ்; எம்பிக்களை எச்சரித்த மத்திய அமைச்சர்; அனல் பறந்த விவாதம்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Madurai AIIMS; Union minister warns DMK MPs; A heated debate

 

மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவிற்கும் திமுக எம்.பிக்களுக்கும் இடையே மக்களவையில் கடுமையான வாதங்கள் நடந்தது.

 

மக்களவையில் கேள்வி நேரத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு, நாட்டில் எத்தனை மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் துவங்கப்படாத மருத்துவக் கல்லூரிகள் எத்தனை என கேள்விகள் எழுப்பினார்.

 

இதற்கு  பதில் அளித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, “மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குகின்றன. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மருத்துவமனை தொடங்கப்பட்டு விட்டது. மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டும் மேம்படுத்தப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதை அரசியல் ஆக்குகின்றன. மதுரையில் கல்லூரி கட்ட உரிய நேரத்தில் மாநில அரசு நிதி ஒதுக்காததும், நிதியுதவி அளிப்பதாக சொன்ன ஜப்பான் பன்னாட்டு நிதியுதவி நிறுவன பிரதிநிதிகள் கடந்த 2 ஆண்டுகளாக மதுரைக்கு வர முடியவில்லை. இதனால் திட்ட செலவு அதிகரித்துள்ளது. இம்மாதிரியான அனைத்து தகவல்களையும் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு அளித்துள்ளோம். ஆனால் அதையும் மீறி எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஆக்குகின்றனர். 

 

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், குறைந்த நோயாளிகள் மற்றும் குறைந்த பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு இயங்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறேன். இதனால்தான் என் மீது கோபப்படுகின்றனர் பரவாயில்லை. இதனால் பின்வாங்கி விட மாட்டேன்” எனக் கூறினார்.

 

ஆனாலும் அமைச்சர் பேசத் தொடங்கியதில் இருந்து திமுக எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்புக் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த அமைச்சர், “விடமாட்டேன். யாருக்கு என்ன கடிவாளம் போட முடியுமோ அது போடப்படும்” எனக் கூறினார். இதனைக் கேட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் எங்களை மிரட்டுகின்றார் மன்னிப்பு கேட்க வேண்டுமென சபாநாயகரிடம் வாதிட்டனர். தொடர்ந்து அவையில் இருந்து வெளியேறினர்.

 

 

Next Story

‘ஒருவரிடம் இருந்து 18 பேருக்கு பரவும் தன்மை; அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது’ - சுகாதாரத்துறை தகவல்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022
'One-to-18 transmission; next 40 days critical' - health department shock

 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் ‘பி.எஃப்.7’ என உருமாறி அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்தியாவிலும் புது வகை கொரோனா பரவல் தொடர்பான அச்சம் மேலோங்கி வரும் நிலையில், மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் காரணமாக மாநிலங்களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், இந்தியாவில் புதுவகை கொரோனா பரவலைத் தடுப்பதில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தது என சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் ஜனவரி மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா அலை ஒன்று, இரண்டு ஆகியவற்றின் போக்குகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கடந்த சில நாட்களில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வகை கொரோனா மனிதர்களிடையே தொற்றும் விகிதம் அதிகமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்பிருந்த கொரோனா தொற்றுகள் ஒருவரிடம் இருந்து சராசரியாக 5 முதல் 6 பேருக்கு பரவும் வேகத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் புது வகை ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.