Skip to main content

மிஷன் 2024: காங். உடனான கூட்டணயில் சலசலப்பை ஏற்படுத்திய திரிணாமூல் காங். நாளேடு!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

mamata - rahul

 

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, தேசிய மாநாட்டுக் கட்சி என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் திரிணாமூல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஜாகோ பங்களா கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு பிரதமர் பதவி மீது கண் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என கருதப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்தச் சூழலில் ஜாகோ பங்களாவில் 'ராகுல் காந்தி தோற்றுவிட்டார், மம்தாவே மாற்று' என வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், "காங்கிரஸ் இல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணி பற்றி நாங்கள் ஒருபோதும் விவாதிக்கவில்லை. ஆனால் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி இன்னும் உருவாகவில்லை. மம்தா பானர்ஜி நாட்டிற்கான மாற்று முகம். அந்த மாஸ் லீடரை (மம்தாவை) மாற்றாக முன்வைத்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யத் தொடங்குவோம்" என கூறப்பட்டுள்ளது.

 

மேலும் அந்தக் கட்டுரையில், "ராகுல் காந்திக்கு பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் தோல்வியடைந்துவிட்டார். மாற்று கூட்டணி காங்கிரசுடன் ஏற்படுத்தப்படும். ஆனால் பிரச்சாரத்திற்கு வலுவான ஒரு முகம் இருக்க வேண்டும். அந்த முகம் மம்தா பானர்ஜி" என கூறப்பட்டுள்ளது.

 

அதை தொடர்ந்து, "நாடு மாற்று ஒன்றைத் தேடிவருகிறது. எனக்கு ராகுல் காந்தியை நீண்டகாலமாக தெரியும். ஆனால் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று முகமாக உருவாக தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மோடிக்கு மாற்று முகமாக மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்" என திரிணாமூல் காங்கிரஸின் மக்களவை தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தக் கட்டுரை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டுரையினால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் சிக்கல் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே இந்தக் கட்டுரை குறித்துப் பேசியுள்ள காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, "மாற்று முகமாக யார் வெற்றிபெற்றுள்ளார், யார் வெற்றிபெறவில்லை என்ற விவாதத்தில் ஈடுபடமாட்டோம். இது 2021தான். மக்களவைத் தேர்தல் 2024இல்தான் நடைபெற உள்ளது. 2014 முதல் மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி நிலையான எதிர்க்கட்சித் தலைவராக இருந்துவருகிறார்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், "ஒரு கூட்டணி உருவாகும்போது, கூட்டணியை யார் வழிநடத்துவது என்பது குறித்து அனைவரும் ஒருமனதாக முடிவெடுப்பார்கள் என்றே இந்திய அரசியல் வரலாறு தெரிவிக்கிறது. எனவே அதுவரை நிறைய கருத்துகள் வரும். ஆனால் அவையெல்லாம் இறுதி முடிவல்ல" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.