Skip to main content

கோர விபத்து; 51 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் போக்குவரத்து தொடக்கம்!

 

Trains resumed at Bahanaga station

 

ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண வைக்கப்பட்டுள்ள நிலையில் 275 பேரில் 88 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை அடையாளம் காண சடலங்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இணையதளங்களிலும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதியில் 51 மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் ரயில் போக்குவரத்து சோவை தொடங்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற பாஹநாகா ரயில் நிலையத்தில் உருக்குலைந்து கிடந்த ரயில் பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, சனிக்கிழமை இரவு தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. சுமார் 1000 பணியாளர்களைக் கொண்டு இரவு பகலாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், டவுன் லைன் மற்றும் அப் லைன் இரண்டும் சரிசெய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு டவுன் லயனில் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி முன்னிலையில் அப் லைனிலும் சரக்கு ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு சென்னை - புவனேஷ்வருக்கு ரயில் இயக்கப்படவுள்ளது. இன்று இரவு சரியாக 7.20 மணிக்கு புறப்படும் ரயில் நாளை பிற்பகல் 3.25 மணிக்கு புவனேஸ்வர் சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !