Skip to main content

"அதிக சகிப்புத்தன்மை வேண்டும்" - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஸொமேட்டோ நிறுவனர்!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

ZOMOTO

 

ஸொமேட்டோ செயலியில் விகாஷ் என்ற நபர் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவு அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஸொமேட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்ட அவர், இதுதொடர்பாக புகாரளித்ததுடன் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார்.

 

இதுதொடர்பான உரையாடலின்போது, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்றும், எனவே அனைவரும் அதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவனம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், #RejectZomato என்ற ஹாஷ்டேக்கும், #HindiIsNotNationalLanguage என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாக தொடங்கியது. அதேபோல் #Hindi_Theriyathu_Poda என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது.

 

இதனையடுத்து ஸொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியது. இந்தநிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஸொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பதிவில், நாட்டில் இப்போது இருப்பதைவிட அதிக சகிப்புத்தன்மை வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 

தீபிந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் ஆதரவு மையத்தில் யாரோ ஒருவரின் அறியாபிழை தேசிய பிரச்சினையாக மாறிவிட்டது. நம் நாட்டில் சகிப்புத்தன்மை இப்போது இருப்பதைவிட அதிகமாக இருக்க வேண்டும். இங்கு யாரைக் குறை கூறுவது?

 

நாங்கள் அந்த முகவரை மீண்டும் பணி அமர்த்துகிறோம். அவர் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு இது மட்டுமே காரணமாக இருக்கக் கூடாது. இதிலிருந்து அவர் எளிதாக கற்றுக்கொண்டு, முன்னோக்கிச் செல்லும்போது சிறப்பாக செயல்படலாம்.

 

நினைவில் கொள்ளுங்கள், எங்களது கால் சென்டர் முகவர்கள் இளைஞர்கள். அவர்கள் கற்றலிலும், தொழில் வாழ்க்கையிலும் தொடக்கத்தில் உள்ளனர். அவர்கள் மொழிகள் மற்றும் பிராந்திய உணர்வுகளில் நிபுணர்கள் அல்ல. நானும் கூட அதில் நிபுணர் இல்லை. நாம் அனைவரும் மற்றவரின் குறைபாடுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். மேலும், மற்றவரின் மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளைப் பாராட்ட வேண்டும்.

 

தமிழ்நாடு - நாங்கள் உன்னை நேசிக்கிறோம். நாட்டின் மற்ற பகுதிகளை நாங்கள் எவ்வளவு நேசிக்கிறோமோ அந்தளவிற்கு நேசிக்கிறோம். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நேசிக்கவில்லை. நாம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோமோ, அதே அளவு ஒற்றுமையாக இருக்கிறோம்.” இவ்வாறு தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

 

இந்தநிலையில், சகிப்புத்தன்மை அதிகம் வேண்டும் என தீபிந்தர் கோயல் கூறியதற்காக மீண்டும் சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. மேலும், இந்த ட்விட்டர் பதிவு செய்த தவறை நியாயப்படுத்துவது போல் இருப்பதாகவும் இணையவாசிகள் கண்டம் தெரிவித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.