![Three people, including a 6-year-old girl, were loss their when a car plunged into the river](http://image.nakkheeran.in/cdn/farfuture/yf-4zGgl2Q1oq9QLkKXvM4g5BCOgRQddkoZARANsvG8/1671451277/sites/default/files/inline-images/n222590.jpg)
கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றுக்குள் விழுந்ததில் ஆறு வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை அடுத்துள்ள ஆராட்டுபுழா பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற இருந்த திருமணம் விழாவில் பங்கேற்பதற்காகத் திருச்சூரைச் சேர்ந்த ராஜேஷ்பாபு அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். மதிய வேளையில் ஆராட்டுபுழா பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் வழியாக வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ராஜேஷ்பாபு காரை இயக்க முற்பட்ட நிலையில், காரானது எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் விழுந்தது.
கார் ஆற்றுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பேரிடர் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி மிகவும் ஆழமான பகுதி என்பதால் காரை கயிற்றில் கட்டி ஓரமாக இழுத்து வந்து காரில் சிக்கியிருந்த ஆறு பேரையும் மீட்டனர். ஆறு பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராஜேஷ்பாபு அவரது மனைவி மற்றும் அவரது 6 வயது பேரக்குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள மூன்று பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருச்சூர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.