Skip to main content

சத்தீஸ்கரில் காணாமல் போன மூன்று சிறுமிகள் கரூரில் மீட்பு

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Three missing girls in Chhattisgarh rescued in Karur

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் காணாமல் போன மூன்று சிறுமிகளை அம்மாநில  தனிப்படையினர் கரூரில் உள்ள செங்கல் சூளையில் மீட்டனர். அதே செங்கல் சூளையில் மேலும் 11 பேர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தவர்களையும் மீட்டதால் கரூரில் பரபரப்பு.

 

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தைச்  சேர்ந்த மூன்று சிறுமிகளைக் காணவில்லை என்று காவல்துறை, மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர். புகாரைத் தொடர்ந்து நாராயண்பூர் மாவட்ட ஆட்சியர், அம்மாவட்டத்தைச் சேர்ந்த, சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை குழந்தைகள் நல அலுவலர் சரிதா மற்றும் காவல் ஆய்வாளர் உத்தம் காவுடே தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படையினரை அமைத்துத் தேடிவந்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் தேடியுள்ளனர்.

 

இந்நிலையில் காணாமல் போன மூன்று சிறுமியும் இன்று கரூரில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பெயரில் அம்மாநிலத்தைச் சேர்ந்த நாராயண்பூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட ஆட்சியரிடம்  தொடர்பு கொண்டு மீட்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவின் பெயரில் கரூர் மாவட்ட சமூக நலத்துறை துணை ஆட்சியர் சைபுதீன்,  கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மோகன்ராஜ், கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குணசீலி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தனிப்படையினர், கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியம் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் அதிக அளவில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருவதால் அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

Three missing girls in Chhattisgarh rescued in Karur

 

விசாரணையில்  சத்தீஸ்கர்  மாநிலத்தில் காணாமல் போன அந்த மூன்று சிறுமிகள் அங்கு வேலை பார்த்துத் தெரிய வந்தது. உடனடியாக அந்த மூன்று சிறுமிகளை மீட்டுள்ளனர். மேலும் அதே செங்கல் சூளையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 8 பெண்கள், 3 ஆண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களையும் மீட்டுள்ளனர்.  மீட்கப்பட்ட 14 பேர்களில் 11 சிறுமிகள் குழந்தைத் தொழிலாளர்களாகவும் மூன்று ஆண்கள் கொத்தடிமைகளாகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். அனைவரையும் மாயனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

தொடர்ந்து 14 பேர்களிடம் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து எப்படி வந்தார்கள் என சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் கரூர் மாவட்ட காவல்துறையினர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை அழைத்து வந்த இடைத்தரகர் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது குழந்தைகளை பணியில் அமர்த்தியது மற்றும் கொத்தடிமைகளாக வேலை வாங்கியது உள்ளிட்ட பிரிவில் நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட சமூக நலத்துறையினர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். மீட்கப்பட்ட 14 நபர்களும் கரூரில் உள்ள அன்புக் கரங்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.