Skip to main content

"மாநிலங்களுக்கான கூட்டமைப்பு வேண்டும்" - மேற்குவங்க முதல்வர் மம்தா!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

mamata - rakesh tikait

 

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு மேலாக அவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில், விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகைத், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து வேளாண் போராட்டங்கள் குறித்தும், மேற்குவங்க விவசாயிகள் விவசாயிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

 

இதன்பிறகு இருவரும் ஒன்றிணைந்து பேட்டியளித்தனர். அப்போது ராகேஷ் திகைத், "விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக முதல்வர் எங்களுக்கு உறுதியளித்தார். இந்த உத்தரவாதத்திற்காக நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். மேற்கு வங்கம் ஒரு முன்மாதிரி மாநிலமாகச் செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்க வேண்டும்" எனக் கூறினார்.

 

மேற்குவங்க முதல்வர் மம்தா பேசுகையில், "தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. கடந்த 7 மாதங்களாக, அவர்கள் (மத்திய அரசு) விவசாயிகளுடன் பேசுவது குறித்துக் கவலைப்படவில்லை. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் கூறினார்.

 

தொடர்ந்து அவர், "மாநிலங்களை ஒடுக்குவது கூட்டாட்சி கட்டமைப்பிற்கு நல்லதல்ல. நமது ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய நான் கேட்டுக்கொள்கிறேன். கூட்டாட்சி கட்டமைப்பில், எந்தவொரு மாநிலமும் துன்புறுத்தப்பட்டால், மற்ற மாநிலங்களும் இணைந்து போராடும் வகையில் இயல்பான மாநில அரசாங்கங்களின் கூட்டமைப்பு இருக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்; பா.ஜ.க கடும் குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJP strongly accused on mamata banerjee on Riots at Ram Navami Procession

நாடு முழுவதும் நேற்று (17-04-24) ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி சார்பாக நேற்று ஊர்வலம் நடத்தினர். அப்போது, அந்த ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கல்வீச்சு தாக்குதல் நடந்த அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கிருந்த கும்பல்களை கலைக்க தடியடி நடத்தியும், புகை குண்டுகளை வீசியும் நிலைமையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, கலவரம் நடந்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம் நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என்று அங்குள்ள பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவேந்த அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ கடந்த ஆண்டு ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள் தல்கோலா, ரிஷ்ரா மற்றும் செரம்பூர் ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது போல், ​​இந்த ஆண்டும் மம்தா காவல்துறை ராம பக்தர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்ற அமைதியான ராம நவமி ஊர்வலம், சில குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மம்தாவின் காவல்துறை  குற்றவாளிகளுடன் சேர்ந்து, ஊர்வலம் திடீரென முடிவடைவதை உறுதி செய்வதற்காக ராம பக்தர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளது. இது மட்டுமின்றி, மாணிக்யஹார் மோரில் உள்ள சனாதானி சமூகத்தைச் சேர்ந்த கடைகளை  கொள்ளையடிப்பதையும் மம்தாவின் காவல்துறை தடுக்க முடியவில்லை. 

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மம்தா பானர்ஜியே காரணம். அவரின் ஆத்திரமூட்டும் பேச்சின் காரணமாகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் சீர்குலைக்கப்பட்டன். எனவே, மேற்கு வங்கத்தில் மத விழாக்களை அமைதியான மற்றும் குற்றச் சம்பவங்கள் இல்லாமல் கொண்டாட, மாநில அரசு மாற்றப்பட வேண்டும். மேலும், ராம பக்தர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.