Skip to main content

“நான் அவன் இல்லை...” - இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Telugu engineer arrested for cheating student of 3.36 lakhs

 

கேரளாவைச் சேர்ந்த 22 வயது பெண், சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். இவர் திருமணத்திற்கு வரன் பார்ப்பதற்காக மேட்ரிமோனியில் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு, சுய விவரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த மணிகண்ட சாய்(24) என்பவர் மேட்ரிமோனியில் கேரள பெண்ணின் சுய விவரத்தைப் பார்த்துள்ளார். மேலும், அதிலிருந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்ட மணிகண்ட சாய், தான் பி.டெக் முடித்துவிட்டு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாகப் பேச்சைத் தொடங்கியுள்ளார்.

 

இப்படியாகப் பேச்சைத் தொடர்ந்த மணிகண்ட சாய், அந்த பெண்ணிடம் “உங்களை எனக்குப் பிடித்துள்ளது, நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? எனக் கேட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் மணிகண்ட சாயிடம் அவரது புகைப்படத்தைக் கேட்க அவரும் அனுப்பி வைத்திருக்கிறார். இதில் மேட்ரிமோனியில் முகப்பு படத்தில் மணிகண்ட சாய் அவரது புகைப்படத்தை வைக்காமல் வேறு இளைஞரின் புகைப்படத்தை வைத்துள்ளார். அதனால் அந்த இளைஞரின் புகைப்படத்தையே கேரள பெண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படம் கேரள பெண்ணிற்குப் பிடித்துப்போக ஒன்றரை வருடங்களாக இருவரும் கைப்பேசியில் பேசத் தொடங்கியுள்ளனர். 

 

இந்த நிலையில், ஒருநாள் அந்த கேரள பெண்ணிடம் தனது தாய் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மருத்துவச் செலவுக்கு ரூ. 3.50  லட்சம் பணம் தேவைப்படுவதாகவும் அழுத நிலையில் கேட்டுள்ளார். அந்த பெண்ணும் திருமணம் செய்துகொள்ளத்தானே போகிறோம் என்று நம்பி, ரூ. 3.36 லட்சத்தை மணிகண்ட சாய் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட மணிகண்ட சாய், அந்த பெண்ணிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் அழைப்பிற்கு மணிகண்ட சாய் பதிலளிக்காமல் இருந்துள்ளார். பின்னர் பெண்ணிற்குச் சந்தேகம் எழவே, மணிகண்ட சாய்க்கு தொடர்ந்து தொலைப்பேசியில் அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்துள்ளார். பின்பு தொலைப்பேசி அழைப்பை எடுத்த மணிகண்ட சாயிடம், தன்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுங்க என்று கேட்க, பணத்தை எல்லாம் திருப்பித் தரமுடியாது என்று கூறிய மணிகண்ட சாய், உன்னுடைய புகைப்படம் என்னிடம் உள்ளது, அதனை மார்ஃபிங் செய்து வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கேரளப் பெண் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிகண்ட சாயின் தொலைப்பேசி எண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், மணிகண்ட சாய் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் மேட்ரிமோனியில் வேறு ஒருவரின் புகைப்படத்தை வைத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா விரைந்த போலீஸ், மணிகண்ட சாயை கைது செய்து சென்னை அழைத்து வந்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்துள்ளதும், நிறைய பெண்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து தொலைப்பேசியில் வைத்திருந்தது தெரியவந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.