![supreme court judgement Freedom of opinion needs no further restraint](http://image.nakkheeran.in/cdn/farfuture/1Ig78geiWeiCsH06NI-Y-jHG_eSs5kBqV9V3iVMS0BA/1672725639/sites/default/files/inline-images/995_240.jpg)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அசாம் கான் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்திருந்தார். இவரின் இந்தக் கருத்துக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், மக்கள் பிரதிநிதிகளுக்கு பேச்சுரிமையில் கட்டுப்பாடு வேண்டும் எனப் பலரும் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரம் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், பேச்சு மற்றும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்த கூடுதல் விதிகளை அமல்படுத்த தேவையில்லை. அரசியலமைப்பு பிரிவு 19 உட்பிரிவு 1 மற்றும் 2-ன் கீழ் தற்போது எந்தெந்த விதிகள் இருக்கிறதோ, அந்த விதிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும். மக்கள் பிரதிநிதி வெளியிடும் அறிக்கைக்கு அவரே முழு பொறுப்பு எனக் கூறப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட அமர்வில் 4 பேர் ஒரு தீர்ப்பும், ஒருவர் மாறுபட்ட தீர்ப்பும் வழங்கியுள்ளனர்.