கடந்த 27ஆம் தேதி முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனத்தின் சென்னை, பெங்களூரு வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. வரி செலுத்தாத புகாரில் 2500 கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. ஏற்கனவே சில ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்களின் வேலை திடீரென பறிபோனது, ஊதிய உயர்வு கிடைக்காமல் இருப்பது, ஆட்குறைப்பு நடவடிக்கைகள் என தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மத்தியில் கவலையில் இருக்கும் வேளையில் வெளியான இந்த செய்தி காக்னிசன்ட் நிறுவனத்தின் லட்சக்கணக்கான ஊழியர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
![cognizant](http://image.nakkheeran.in/cdn/farfuture/IEwykfLM3nkuaphkiDaUO8OHIov02xlbdNBzIHL9KnI/1533347644/sites/default/files/inline-images/cognizant-technology-solutions-mahabalipuram-outsourcing-kapparath-provider_65bb06c4-0e18-11e7-be49-55692bf38950.jpg)
இந்நிலையில் காக்னிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளது. அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, கேரன் மெக்லௌளின் அனுப்பியிருக்கும் அந்த மின்னஞ்சலில், "இந்தியாவில் வருமானவரித்துறை காக்னிசன்ட் மேல் எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்த செய்திகளை நீங்கள் ஊடகங்களின் மூலம் அறிந்திருப்பீர்கள். இந்த அஞ்சலின் மூலம் நமது நிறுவனத்தின் நிலையையும், இந்த நடவடிக்கைகளால் நமது வழக்கமான செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
நாம் நமது வரிகளை செலுத்திவிட்டோம், ஆனால் அவை இன்னும் பரிமாற்றத்தில் இருப்பதால் வருமானவரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற வழக்கமான செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படாது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம்.
![office employees](http://image.nakkheeran.in/cdn/farfuture/5hcTNNDxuxE7Y29fNxcLWBf6Dlpr7I3W-uSEX265ZUc/1533347624/sites/default/files/inline-images/Cognizants-office-in-Chennai.jpg)
காக்னிசன்ட் நிறுவனத்தின் நிதிநிலை ஐந்து பில்லியன் டாலர்களுடன் மிக ஆரோக்கியமாக இருக்கிறது. நமது ஊழியர்கள் எந்த கவலையுமின்றி தொடர்ந்து தங்கள் சிறப்பான பணியைத் தொடரலாம்" என்று தெரிவித்துள்ளார்.
கலக்கத்தில் இருந்த காக்னிசன்ட் ஊழியர்கள் இதனால் நிம்மதியடைந்துள்ளார்கள். மேலும், வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளன்று ஊதியம் செலுத்தப்படும். இந்த முறை சற்று முன்னதாக 27 மார்ச் அன்றே செலுத்தியிருக்கிறது காக்னிசன்ட் நிறுவனம். வங்கிக் கணக்கு முடக்கப்படலாம் என்பது தெரிந்து முன்னரே ஊதியத்தை அளித்திருக்கிறது காக்னிசன்ட்.
இந்தியாவில் முக்கிய வேலைவாய்ப்பாகத் திகழும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அவ்வப்போது நிலையாமை நேர்கிறது.