Skip to main content

இந்து அமைப்பின் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

Published on 08/01/2023 | Edited on 08/01/2023

 

shoot on the leader of the Hindu organization

 

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ளது ஹிண்டலகா கிராமம். இக்கிராமத்தில் ரவி கோகிடகோரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீராம் சேனாவின் மாவட்டத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

 

நேற்று மாலை ரவியும் அவரது கார் ஒட்டுநரும் அவரது காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ரவி சென்ற கார் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். 

 

இத்தாக்குதலில் ரவியின் தாடையிலும் ஓட்டுநரின் கையிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே காரை ஓட்டுனர் நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்த மக்கள் உடனே பெலகாவி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தாக்குதலுக்கு ஆளானவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

துப்பாக்கிச் சூடு தாக்குதலைக் கேள்விப்பட்டு மருத்துவமனை முன்பு இந்து ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்தனர். இதனால் மருத்துவமனையின் முன்பு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு தொடர்ந்து விசாரித்ததில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அபிஜிதா சோம்நாத் பத்கந்தா (41) , ராகுல் நிங்கானி (32), ஜோதிபா கங்காராம முதாகேடகர் (25) என மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூவரையும் விசாரித்ததில் காயமடைந்த ரவி கோகிடகராவுக்கும் அபிஜிதா பத்கந்தாவுக்கும் இடையே ஏற்பட்ட நிதி தகராறுதான் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.