Skip to main content

எம்.பி.யாக தேர்வாகியுள்ள செல்வகணபதி... புதுச்சேரி அரசியல் வரலாற்றில் பாஜக!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Selvaganapathi elected as MP ... BJP in Puducherry political history

 

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினரான கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி முடிவடைகிறது. அதற்காக புதிய மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்வதற்காக அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் (22.09.2021) முடிவடைந்தது. இதுவரை 3 சுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையில் மாநிலங்களவை எம்.பி. பதவியை யாருக்குத் தருவது, பெறுவது என்பதில் போட்டி நிலவிவந்தது. பாஜக தலைமை நேரடியாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேசியதைத் தொடர்ந்து சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து பாஜகவின் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக மாநிலப் பொருளாளரும், முன்னாள் நியமன எம்.எல்.ஏவுமான செல்வகணபதியை கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று செல்வகணபதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரின் வேட்புமனுவை முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்களும், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக எம்.எல்.ஏக்களும் பரிந்துரை செய்தனர். சட்டமன்றச் செயலாளர் முனுசாமியிடம் செல்வகணபதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய். சரவணகுமார் மற்றும் எம்.எல்.ஏக்கள் உடனிருந்தனர்.

 

எதிர் தரப்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. பெரும்பான்மை பெற்றிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகிறார். வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது. இதில் சுயேச்சையாக தாக்கல் செய்யப்பட்டவர்களின் மனுக்கள், எம்.எல்.ஏக்கள் பரிந்துரை இல்லாததால் தள்ளுபடி செய்யப்படும். 27ஆம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற இறுதி நாளாகும். அன்றைய தினம் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக செல்வகணபதி போட்டியின்றி தேர்வானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

Selvaganapathi elected as MP ... BJP in Puducherry political history

 

புதுச்சேரியில் மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இதுவரை வெற்றிபெற்றதில்லை. ஆனால் பலமுறை மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டுள்ளது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக பாஜகவைச் சேர்ந்தவர் தேர்வாகிறார். இதன்மூலம் செல்வகணபதி புதுவையின் முதல் பாஜக எம்.பி. ஆகிறார். இதனிடையே புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் அவர், காங்கிரஸ் ஆட்சியின் நிறைவுகாலத்தில் காங்கிரசிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரசில் சேர்ந்தார்.

 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகியிருந்த மல்லாடி கிருஷ்ணாராவ், ரங்கசாமி மூலம் மாநிலங்களவை உறுப்பினராகிவிடலாம் என கனவு கண்டார். எப்படியும் எம்.பி. ஆகிவிடுவோம் என்று எண்ணியிருந்த மல்லாடியின் கனவு பொய்யானது. ஆட்சியின் கடைசி நேரத்தில் கட்சி மாறிய மல்லாடி கிருஷ்ணாராவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்து, காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.