![The search for Vetri Duraisamy continues for the 7th day](http://image.nakkheeran.in/cdn/farfuture/37XNRw216iwIczNGI7c4AMqDp9I0Pn0qPZEk-f1-B5s/1707548894/sites/default/files/inline-images/vetrri-duraisaamy-art_0.jpg)
இமாச்சலப் பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.
இந்த விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் சிக்கி பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். அதே சமயம் இந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 6 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
![The search for Vetri Duraisamy continues for the 7th day](http://image.nakkheeran.in/cdn/farfuture/3_69iPpRzPm4wEsN03oFJiJeNbWsdLk9DJTQrIYnS5k/1707548913/sites/default/files/inline-images/vetrri-duraisaamy-demo-art.jpg)
இந்நிலையில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை மத்திய பிரதேச போலீசார், ராணுவ வீரர்கள், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் 7 வது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த வகையில் சட்லெஜ் நதியில் வெற்றி துரைசாமி காணாமல் போன விவகாரத்தில், விபத்து எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக அவரைப் போல எடை மற்றும் உயரம் கொண்ட மாதிரி (DEMO) பொம்மையை ஆற்றில் வீசி, விபத்து நடந்தபின் வெற்றி துரைசாமி எவ்வழியாக நதியில் சென்றிருப்பார் என மீட்புக் குழுவினர் சோதனை நிகழ்த்தி அவரைக் கணடறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.