Skip to main content

பெகாசஸ் விவகாரம்: அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

supreme court

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஃப்ரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்திய உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

 

இந்தச் சூழலில், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க வல்லுநர் குழுவை அமைக்க தயார் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, சட்டவிரோதமாக எந்த ஒட்டுக்கேட்பும் நடைபெறவில்லை என கூறியதோடு, தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் மத்திய அரசு பெகாசஸைப் பயன்படுத்தியதா என்பது குறித்து பிரமாணப் பத்திரத்தில் கூற முடியாது எனவும், இந்த விவகாரம் குறித்து அரசுடன் தொடர்பற்ற வல்லுநர்களின் குழுவை அமைக்க அனுமதித்தால் அந்தக் குழுவின் முன்னர் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என தெரிவிக்க தயார் எனவும் கூறியது.

 

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது. இந்தநிலையில், உச்ச நீதிமன்றம் இன்று (27.10.2021) பெகாசஸ் விவகாரத்தில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வாசித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

 

"மனுதாரர்களில் சிலர் பெகாசஸால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து  தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். நாம் தகவல் சகாப்தத்தில் வாழ்கிறோம். தொழில்நுட்பம் முக்கியமானது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். தனியுரிமையைப் பாதுகாப்பது முக்கியம், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து குடிமக்களுக்கும் தனியுரிமை முக்கியம். இன்றைய உலகில், தனியுரிமை மீது  கட்டுப்பாடு விதிக்கப்படுவது பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மட்டுமே ஆகும். மேலும், இந்தக் கட்டுப்பாடுகளைத் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க மட்டுமே விதிக்க வேண்டும்.

 

2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பெகாசஸ் தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட மத்திய அரசுக்குப் போதுமான அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும் வரையறுக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்த தகவலும் இல்லை. மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்தியிருந்தால் நம் மீதான சுமை குறைந்திருக்கும். மத்திய அரசு குறிப்பாக எதையும் மறுக்கவில்லை. எனவே மனுதாரர் சமர்ப்பித்தவற்றை முதன்மையாக ஏற்றுக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் ஒரு வல்லுநர் குழுவை நாங்கள் நியமிக்கிறோம். இந்தியர்களைக் கண்காணிப்பதில் வெளிநாட்டு முகமைகளின் பங்கு உள்ளதா என்ற தீவிரமான கவலை உள்ளது." இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவிற்கு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், ரா உளவுப்பிரிவின் முன்னாள் தலைவருமான அலோக் ஜோஷி, தகவல் தொழில்நுட்ப வல்லுனரான சுந்தீப் ஓபராய், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக டீன் நவீன் குமார் சவுத்ரி, பேராசிரியர் பிரபாகரன், இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் அஷ்வின் அனில் குமாஸ்தே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

வல்லுநர் குழுவை அமைத்துள்ள உச்ச நீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய 8 வாரங்கள் அவகாசமளித்து, வழக்கு விசாரணை 8 வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர். பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழு அமைக்க மத்திய அரசு அனுமதி கோரியிருந்த நிலையில், அதனை ஏற்க மறுத்து விசாரணை நடத்த தாங்களாகவே ஒரு குழுவினை அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (24.04.2024) தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.