Skip to main content

நாடு முழுவதும் நாளை போராட்டம் - ஆர்.எஸ்.எஸ் சார்பு விவசாய இயக்கம் அறிவிப்பு!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

bhratiya kisan sang

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வது. இந்தநிலையில், இந்தக் கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ் சார்பு இயக்கமான பாரதிய கிசான் சங்கம் தற்போது கையிலெடுத்துள்ளது.

 

விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில், அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய ஏற்கனவே இருக்கும் சட்டங்களைத் திருத்த வேண்டும் அல்லது புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்த பாரதிய கிசான் சங்கம், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மத்திய அரசு தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், நாடு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தது.

 

இந்தநிலையில் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தும் தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தப் பாரதிய கிசான் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பத்ரிநாராயண் சவுத்ரி, "விவசாயிகள் எதற்காகப் பயிர்களை வளர்கிறார்களோ, அதை அவர்களுக்கு மத்திய அரசு உறுதி செய்யவேண்டும். அரசாங்கம் லாபகரமான ஒரு விலையை அளிக்க வேண்டும் அல்லது எங்கள் கோரிக்கை ஏன் தவறு என்பதை எங்களுக்கு விளக்க வேண்டும். தற்போதைய குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஒரு மோசடி. குறைந்த பட்ச ஆதார விலைக்கு ஒரு சட்டம் வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் "அனைத்து விவசாயிகளுக்கும் சமமான லாபகரமான விலைகளைக் கோரி. நாட்டின் அனைத்து மாவட்ட மையங்களிலும் பாரதிய கிசான் சங்கம் செப்டம்பர் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டங்களை நடத்தும். நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அரசு, இன்னும் பரிவுடன் சிந்திக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.