Skip to main content

ராமோஜி ராவ் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Ramoji Rao passed away Condolences to Prime Minister Modi

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (வயது 87) காலமானார். உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று (08.06.2024) அதிகாலை 03:45 மணிக்கு உயிரிழந்தார். பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராமோஜி ராவின் இறுதிச் சடங்குகளை அரசு மரியாதையுடன் செய்ய தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.  காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, மாநில தலைமைச் செயலருக்கு இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார். அதில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட, ரங்காரெட்டி மாவட்ட கலெக்டர் மற்றும் சைபராபாத் கமிஷனருக்கு தலைமைச் செயலர் மூலம் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனத் தெலுங்கானா மாநில முதல்வர் அலுவலகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. 

Ramoji Rao passed away Condolences to Prime Minister Modi

அதே சமயம் ராமோஜி ராவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராமோஜி ராவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ஊடகத்தில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். அவரது செழுமையான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளன.

அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம், அவர் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை மற்றும் சிறப்பிற்கான புதிய தரங்களை அமைத்தார். ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். நான் அவருடன் பழகி அவருடைய ஞானத்தால் பயனடைந்து பல வாய்ப்புகளைப் பெற்ற அதிர்ஷ்டசாலி ஆவேன். இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Adjournment of Lok Sabha without specifying a date

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இதனையொட்டி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்பி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திமுக எம்பி ஆ.ராசா எனப் பலரும் உரையாற்றினார்.

Adjournment of Lok Sabha without specifying a date

இத்தகைய சூழலில் தான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி இன்று (02.07.2024) பதில் அளித்துப் பேசினார். இதற்கிடையே மணிப்பூர் விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் பிரதமர் மோடி 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பதில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் நாளை (03.07.2024) வரை நடக்கவிருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த வேண்டுமென்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் நாளை (03.07.2024) விவாதிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி இருந்த நிலையில் மக்களவையைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஹத்ராஸ் சம்பவம்; தலைவர்கள் இரங்கல்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
leaders Condolences for Hathras Incident 

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் இன்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காக கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி குழந்தைகள், பெண்கள் என 122 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

leaders Condolences for Hathras Incident 

அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்த பயங்கர விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசினேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உத்தரப்பிரதேச அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கி பலர் உயிர் இழந்தது மிகவும் வருத்தமாகவும், இதயத்தை உலுக்குவதாகவும் உள்ளது. பலரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் லக்ஷ்மி நாராயண் சவுத்ரி ஜி, சந்தீப் சிங், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளது. 

leaders Condolences for Hathras Incident

ஆக்ரா காவல்துறையின் கூடுதல் இயக்குநர் மற்றும் அலிகார் போலீஸ் கமிஷனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு விபத்துக்கான காரணங்களை ஆராய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் ஆன்மா ராமரின் காலடியில் சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்த இந்த கோர விபத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துன்பத்தைத் தாங்கும் சக்தியைக் கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். உள்ளாட்சி நிர்வாகம் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

leaders Condolences for Hathras Incident

மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எக்ஸ் தளத்தில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.