![Rajiv Gandhi Memorial Day Congress leaders Tribute](http://image.nakkheeran.in/cdn/farfuture/NXGEBTRrIrBlfRUkPGx-oIeJGYrblkPGQPRYyn9O34Y/1716266590/sites/default/files/inline-images/rg-art-1.jpg)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினம் இன்று (21.05.2024) நாடு முழுவதும் அனுசரிக்கபடுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் அமைந்துள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சச்சின் பைலட் மற்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
![Rajiv Gandhi Memorial Day Congress leaders Tribute](http://image.nakkheeran.in/cdn/farfuture/iuegslEBp_bxLosDi9LnC0s4AY8xMMW_T5uCYp-3QGs/1716266605/sites/default/files/inline-images/rg-art-2.jpg)
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் எனது அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தியின் படுகொலையை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 21 ஆம் தேதி தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அமைதி, மனிதநேயம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை மக்களிடையே பரப்புவதும், பயங்கரவாதத்தின் சமூக விரோத செயல் குறித்து மக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே பயங்கரவாத எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கம் ஆகும்.