Skip to main content

நாட்டிற்காக 32 தோட்டாக்களை தாங்கியவரின் பெயர் அழைப்பிதழில் கூட இல்லை - ராகுல் காந்தி வேதனை!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

rahul gandhi

 

1971ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தானை போரில் வென்று, அந்த நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு வங்கத்தை, வங்கதேசம் என்ற தனிநாடாக உருவாக்கியது. இந்தப் போரில் இந்தியா வென்ற தினம், ஆண்டுதோறும் வெற்றி தினமாக (விஜய் திவாஸ்) அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றோடு (16.12.2021) பாகிஸ்தானை இந்தியா போரில் வென்று 50 ஆண்டுகள் நிறைவடைந்தது.

 

இதனையொட்டி மத்திய அரசு சார்பில் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இந்தியா, பாகிஸ்தானைப் போரில் வென்றபோது பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலையொட்டி, நேற்று அம்மாநிலத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் சார்பில் 1971 போரில் பங்கேற்ற வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசும்போது, இதுதொடர்பாக மத்திய அரசை விமர்சிக்கவும் செய்தார். அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது வருமாறு,

 

“எனது குடும்பத்துக்கும் உத்தரகாண்ட் மாநிலத்திற்குமான உறவு எனக்கு நினைவிருக்கிறது. என் பாட்டி இந்த நாட்டிற்காக தன்னைத் தியாகம் செய்த அக்டோபர் 31ஆம் தேதி எனக்கு நினைவிருக்கிறது. என் தந்தை ராஜீவ் காந்தி இந்த நாட்டிற்காக தன்னைத் தியாகம் செய்த மே 21 எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் தியாகத்தின் உறவு இருக்கிறது. உத்தரகாண்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் செய்த தியாகத்தை எனது குடும்பமும் செய்துள்ளது. தனது இரத்தத்தை இழந்து இங்கு நிற்பவர்களால் அந்த தியாகத்தை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். இராணுவம், விமானப்படை அல்லது கடற்படையில் இருப்பவர்களால் இதை நன்கு புரிந்துகொள்ள முடியும். ஆனால், தியாகம் செய்யாத குடும்பத்தினாலோ அல்லது நபராலோ அந்த தியாகத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

 

ஆப்கானிஸ்தானை வீழ்த்த அமெரிக்கா 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. ஆனால் 13 நாட்களில் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்தது. 1971இல் என்ன நடந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா ஒன்றுபட்டு ஒன்றாக நின்றது. சிலர் இராணுவம் போரை வென்றது என கூறுகின்றனர், சிலர் அரசியல் தலைமையினால் போரில் வெற்றிபெற்றதாகக் கூறுகின்றனர். கடற்படை மற்றும் விமானப்படையினரால் போரில் நாம் வெற்றிபெற்றதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு சாதியும், ஒவ்வொரு மதமும் ஒன்றுபட்டதால்தான் நாம் பாகிஸ்தானை தோற்கடித்தோம். 

 

அந்த வெற்றிக்கு மற்றொரு காரணம் பாகிஸ்தான் பிளவுபட்டிருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் ஒன்றுடன் ஒன்று போரிட்டுக்கொண்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் பலவீனமாக இருந்தது. இது மிக முக்கியமான பாடம். இந்தியா ஒன்றாக நின்றபோது அமெரிக்காவின் 7வது கடற்படைபிரிவு திரும்பிச் சென்றது. நாம் ஒன்றிணைந்து பேசும்போது, இந்தியாவின் முன் எந்த சக்தியும் நிற்க முடியாது. இன்று நாடு பிளவுபடுத்தப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டுவருகிறது என்பது வேதனையான விஷயம்.  நாட்டுக்காக 32 தோட்டாக்களைத் தாங்கிய பெண்மணியின் பெயர் அழைப்பிதழில் கூட இல்லை. உண்மையைப் பார்த்து அரசு பயப்படுவதே இதற்குக் காரணம். இருப்பினும், இது என்னைக் கவலையடையச் செய்யவில்லை. ஏனென்றால் அவர் நாட்டிற்காக தனது இரத்தத்தை சிந்தினார் என்பதை நான் அறிவேன்.

 

இரண்டு அல்லது மூன்று தொழிலதிபர்களுக்காக அரசு செயல்படுகிறது, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை தொழிலதிபர்களின் ஆயுதங்கள். பிரதமர் நரேந்திர மோடி அதைச் செயல்படுத்தினார். டில்லியில் இருந்து பாஜக அரசு அகற்றப்படும்வரை, இந்த நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்தியா வலுவடைந்துகொண்டிருக்கிறது என்று நம்ப வேண்டாம். அவ்வாறான தவறான எண்ணங்களைக் கொண்டிருக்காதீர்கள். ஹெலிகாப்டர், விமானம் மற்றும் டாங்கிகள் நாட்டை வலிமையாக்காது. மக்கள் அதிகாரம் பெற்றால் மட்டுமே நாடு வலிமை பெறும்.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.