Rahul Gandhi says BJP has destroyed the dreams of the youth

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Advertisment

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

Advertisment

இதையொட்டி, ராஜஸ்தானில் தோல்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரப்பொதுக்கூட்டம் இன்று (21-11-23) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நாட்டின் வளங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில், பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அதிகாரம் எவ்வளவு அளிக்கப்பட்டிருக்கும் என்று தெரிந்து கொள்வதற்கு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக மிக அவசியம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அதே போல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். கோடிக்கணக்கில் வேலை வாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் குறைத்து வருகிறது. நாட்டை காப்பாற்றுவதற்காக கனவுகளுடன் இருந்த இளைஞர்களின் கனவை அக்னிபாத் திட்டத்தின் மூலம் பா.ஜ.க சிதைத்துள்ளது.