
இந்தியாவில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்திலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு ஏற்கனவே இரவு 8 மணியிலிருந்து காலை 7 மணிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கரோனா பரவல் குறித்து ஆராய மஹாராஷ்ட்ரா துணை முதல்வர், தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், புனேவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கு மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புனேவில் உள்ள உணவகங்கள், மால்கள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்டவற்றை ஒருவார காலத்திற்கு மூடவும் துணை முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவுகள், அதற்கடுத்த வெள்ளிக்கிழமை அன்று மறுபரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.