புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் ஜீவரத்தினம் வயது 60). புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கி தரிசனம் செய்து விட்டு நேற்று அதிகாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த, அவர் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து அதிலிருந்த 8 லட்சம் மதிப்புடைய 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ஜீவரத்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து ஜீவரத்தினம் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களையும் பதிவு செய்தனர். ஜீவரத்தினம் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.