Skip to main content

மிதந்த சடலங்கள்; புதைக்கபட்ட உடல்கள் - நீதி விசாரணை கோரும் பிரியங்கா காந்தி! 

Published on 13/05/2021 | Edited on 13/05/2021

 

priyanka gandhi

 

இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், கடந்த 11ஆம் தேதி பீகாரின் பக்ஸர் பகுதியில், கங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதன்தொடர்ச்சியாக, நேற்று (12.05.2021) உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசிப்பூர் பகுதியிலும், மத்தியப் பிரதேசத்திலும் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்தன. பீகாரில் கங்கையாற்றில் 71 பிணங்கள் மிதந்ததாகவும், உத்தப்பிரதேசத்தில் கங்கையாற்றில் 52 உடல்கள் மிதந்ததாகவும் கூறப்படுகிறது. சடலங்கள் கங்கையாற்றில் மிதந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கங்கையாற்றில் மிதந்த உடல்கள், உத்தரப்பிரதேசத்திலிருந்து ஆற்றில் விடப்பட்டிருப்பதாக பீகார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஆற்றில் உடல்கள் மிதந்ததன் தொடர்ச்சியாக தற்போது, உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னோ பகுதியில், கங்கையாற்றின் ஓரத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை கரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களா என சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து ஆற்றில் சடலங்கள் மிதப்பதும், ஆற்றின் கரையோரம் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளுக்கு கரோனா அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தநிலையில், இந்த சம்பவங்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ஆற்றில் சடலங்கள் மிதந்தது குறித்து வெளியான செய்திகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "பல்லியா மற்றும் காசிப்பூரில் உள்ள கங்கையில் உடல்கள் மிதக்கின்றன. உன்னாவோவில் ஆற்றின் கரையில் பெரிய அளவில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. லக்னோ, கோரக்பூர், ஜான்சி, கான்பூர் போன்ற நகரங்களிலிருந்து வெளியான அதிகாரப்பூர்வ கரோனா பலி எண்ணிக்கை, குறைத்து வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது" என கூறியுள்ளார்.

 

மேலும், பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது என்பதோடு, அது குற்றமாகும். மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவதிப்படுகையில், அரசாங்கம் பிம்ப கட்டமைப்பில் மும்மரமாக உள்ளது. இந்த நிகழ்வுகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உடனடியாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மனைவி வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்; பதறி அடித்து போலீசிடம் ஓடிய கணவர்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
The husband ran to the police in panic for Whatsapp status by wife

உத்தரப்பிரேதசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்து போன மனைவி, தனது கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும், அவர் நிரந்தரமான விவாகரத்து கேட்டும் வந்துள்ளார். இதனிடையே, கணவரை விட்டு பிரிந்து வாழ்வதால், முறையான விவாகரத்து கிடைக்கும் வரை தனக்கான பராமரிப்பு தொகையை கணவர் வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை, சமாதானம் செய்வதற்காக மனைவி வீட்டுக்கு கணவர் சென்றுள்ளார். ஆனால், அங்கு, மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘மனைவியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். மேலும், மனைவி தனது பக்கத்து வீட்டு நபருடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதுவே தகராறுக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகாரை அடுத்து கோபமடைந்த மனைவி, தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‘என்னுடைய கணவரை கொல்பவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை உடனடியாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். இந்த விவரம் கணவருக்கு தெரியவர, பதறி அடித்து போன அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும், இந்த தம்பதிகள் மாறி மாறி அளித்த புகார்கள் மீது கண்டு கொள்ளாமல் இருந்த போலீசார், இந்த முறை பிரச்சனையின் வீரியத்தை புரிந்துகொண்ட அவர்கள், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.