
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதால், அதனை தடுக்கும் வகையில் ஈரானோடு ஆயுதக் கொள்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இறங்கியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கடந்த 13ஆம் தேதி அதிகாலை ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகம், அணுசக்தி நிலையங்கள், கச்சா எண்ணெய் கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் பலியாகினர்.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே தாக்குதல் நடத்தினோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பின்னால், அமெரிக்காவின் தூண்டுதல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும், ஏவுகணைகள் மூலமாகவும், ட்ரோன்கள் மூலமாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதே சமயம் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர் தாக்குதலில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதோடு இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் ஃபார்டோ, நடான்ஸ், எஸ்ஃபஹான் உள்ளிட்ட ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் உரையாடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ஈரானில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பாக அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி, ஈரான் அதிபரிடம் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண வேண்டும். உடனடியாக பதற்றமான சூழ்நிலையைத் தணிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். அப்போது மசூத் பெஷேஷ்கியன் சமீபத்திய தாக்குதல் அதிகரிப்பு குறித்த ஆழ்ந்த கவலையை அவர் வெளிப்படுத்தினார். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், முன்னோக்கிச் செல்வதற்கும், பதற்றத்தை உடனடியாகக் குறைத்தல், உரையாடல் மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றுக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.