Skip to main content

புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
President approves 3 new bills

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். அதன் பின்னர், அவை நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது. அந்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு புதிய குற்றவியல் மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. மேலும், நாடாளுமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் கடந்த வாரம் வாபஸ் பெறப்பட்டன.

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை மத்திய உள்துறை அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் மீதான விவாதம் கடந்த 20 ஆம் தேதி (20-12-23) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.  அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும்  கடந்த 21 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்த  3  புதிய குற்றவியல் மசோதாக்களும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து  3  புதிய குற்றவியல் மசோதாக்களும் தற்போது அமலுக்கு வந்துள்ளன. 

சார்ந்த செய்திகள்

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பச்சை துரோகம்” - விஜய் சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vijay sethupathi election video

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் அன்றே நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தி.மு.க, காங்கிரஸ், இடது சாரிகள், வி.சி.க, உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனி கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க தேசிய ஜனநாயக கூடணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதையொட்டி தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விஜய் சேதுபதி வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பேசியதாவது, “நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தா நமக்கென்ன... இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்... ஒட்டு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை... இது போன்ற மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.   

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. 

நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலைத் பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்க, என்ன சொல்றாங்க என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க. இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்க” என்றார்.