Skip to main content

கர்நாடக காங்கிரஸைக் குறிவைக்கும் திரிணாமூல் - களமிறங்கிய பிரசாந்த் கிஷோர்!

Published on 26/11/2021 | Edited on 27/11/2021

 

prashant kishor

 

திரிணாமூல் காங்கிரஸ், தேசிய அரசியலில் தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் கட்சியின் கிளைகளை விரிவுபடுத்தும் முயற்சிகளில் திரிணாமூல் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

 

இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைத் திரிணாமூல் காங்கிரஸ் தங்கள் பக்கம் இழுத்துவருகிறது. இதில் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் முக்கிய பங்கு ஆற்றி வருகிறார்.

 

இந்தநிலையில் நேற்று முன்தின இரவு, மேகாலயா மாநிலத்தில் உள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 11பேர், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் எம்.எல்.ஏவுமான முகுல் சங்மாவின் தலைமையில் திரிணாமூல் காங்கிரசுக்குத் தாவினர். இதில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்ததை முகுல் சங்மா செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

 

இந்தநிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர், பெங்களூரில் முகாமிட்டுள்ளதாகவும், அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான எம்.பி.பாட்டீலை சந்தித்து அவரை திரிணாமூல் காங்கிரசுக்கு அழைக்க முயன்றதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பிரசாந்த் கிஷோரை  எம்.பி.பாட்டீல் நேரில் சந்திக்காமல், தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது அவர் திரிணாமூல் காங்கிரசில் இணைய மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

அதேநேரத்தில் பிரசாந்த் கிஷோர், வேறு சில காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்க முயன்று வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீண்டும் பாஜகவிற்கு செல்வேன்” - ஈஸ்வரப்பா திட்டவட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Eshwarappa says I will go back to BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த வகையில், பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். மேலும், முதற்கட்டமாக நடைபெறும் 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் கடந்த 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.கவின் மூத்த தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா, ஹவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.ஈ. கந்தேஷ் போட்டியிட பா.ஜ.க தலைமைக்கு வாய்ப்பு கோரியிருந்தார். ஆனால், அம்மாநில பா.ஜ.க தலைவர் பி.ஓய். ராகவேந்திரா, அந்த வாய்ப்பை வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்சி மீது அதிருப்தியில் இருந்த கே.எஸ். ஈஸ்வரப்பா, இந்த விவகாரம் குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளித்தார். ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக கே.எஸ். ஈஸ்வரப்பா அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து மீதமுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கலானது கடந்த 19ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது கே.எஸ். ஈஸ்வரப்பா, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். இத்தகைய செயல் பா.ஜ.க.வினர்  மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. 

Eshwarappa says I will go back to BJP

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தராததால் சுயேச்சையாக போட்டியிட்ட கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் கே.எஸ். ஈஸ்வரப்பாவை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. ஷிவமோகா தொகுதியில் பாஜக வேட்பாளர் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவிக்கையில், “கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளேன். இன்னும் நம்பிக்கை உள்ளது.  கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டத்திற்குப் பயப்படவில்லை. இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் பா.ஜ.க.வுக்கு செல்வேன். 5 முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

'அபாண்டமாக பொய் பேசுகிறார் மோடி;-ப.சிதம்பரம் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 'Modi speaks a lot of lies;- P. Chidambaram condemns

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மோடி பேசிய ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மக்களின் நகை, சொத்துக்களைப் பறித்து இஸ்லாமியர்களிடம் தந்து விடுவோம் என்று காங்கிரஸ் எப்போது பேசியது என்று பாஜகவினால் கூற முடியுமா? தனிநபரின் சொத்துக்களையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் எனக் காங்கிரஸ் எப்போது கூறியது? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் எனக் காங்கிரஸ் எப்போது பேசியது? நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே பதவி வகித்த பிரதமர்களை கொஞ்சமாவது மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களில் மோடி அபாண்டமாக பொய் பேசி உள்ளார். இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியை போல் அடாவடியாக பேசியது இல்லை''எனக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.