சினிமாவிலிருந்து ஒதுங்கி தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் பிரகாஷ்ராஜ். நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் சுயேச்சையாக போட்டியிடும் இவர், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவருகிறார்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய டெல்லி சென்றுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, டெல்லி பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களால் உள்ளூர் மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படுவது குறித்து கேள்விகேட்கப்பட்ட போது, தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோவது உண்மைதான் என்றும், நான் தமிழன் அல்ல, கன்னடக்காரன் என்றும் பிரகாஷ் ராஜ் கூறினார்.
அவரின் இந்த பதில் தமிழகம் முழுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரகாஷ் ராஜ், "நிச்சயாக எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது நான் அப்படிப் பேசவே இல்லை. தவறான எண்ணத்துடன் இப்படித் திரித்துச் சொல்கிறார்கள். இவ்வளவு தரம் தாழ்பவர்களை எண்ணி வெட்கப்படுகிறேன்" என விளக்கமளித்துள்ளார்.