
புதுச்சேரி துறைமுகத்தில் தமிழகம், கேரளா பகுதி மீன்கள் விற்கப்படுவதாகவும் அதனால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி கடந்த வாரம் தேங்காய்திட்டு துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு புதுச்சேரி விசைப்படகு மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுவரை இது குறித்து அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து உப்பளம் சோனாம்பாளையம் சந்திப்பில் புதுச்சேரி விசைப்படகு மீனவர்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீனவர்களின் திடீர் போராட்டம் காரணமாகச் சட்டப்பேரவைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு போலீசார் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.