Skip to main content

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை துவக்கிவைத்த பிரதமர் மோடி

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

PM Modi inaugurated the Nellai-Chennai Vande Bharat train

 

இந்தியாவில் 11 மாநிலங்களில் புதிதாக 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி இன்று (24ம் தேதி) தொடங்கி வைத்தார். 

 

இந்திய ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீல நிறமும், வெள்ளை நிறமும் இருக்கும் வகையில் தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. 

 

இந்நிலையில் தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத் என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

 

அதன்படி திருநெல்வேலி - சென்னை, உதய்பூர் - ஜெய்ப்பூர், ஐதராபாத் - பெங்களூரு, விஜயவாடா - சென்னை, பாட்னா - ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா - பூரி, ராஞ்சி - ஹவுரா என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

 

இதில், சென்னை - நெல்லை இடையான ரயில், நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அதேபோல், சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில்கள் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும், செவ்வாய்க்கிழமை நீங்கலாக வாரத்தின் மற்ற அனைத்து நாட்களும் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.

 

 

சார்ந்த செய்திகள்