Skip to main content

பற்றி எரியும் மணிப்பூர்; மனதின் குரலில் மௌனம் காத்த பிரதமர் 

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

PM Modi avoids Manipur in manki bath program

 

பிரதமர் மோடி மாதந்தோறும் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் என்ற பெயரில் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி அமெரிக்க செல்லவுள்ளதால் மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

 

அப்போது நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியை ஒருபோதும் மறக்கமுடியாது. அந்த நாளில் தான் நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. இந்திய வரலாற்றின் கருப்பு பக்கமாக அது அமைந்தது. லட்சக்கணக்கானோர் அவசரநிலையை முழு மனதுடனும் எதிர்த்தனர். அப்படி எதிர்த்தவர்கள் பல துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்” என்றார். 

 

இதனைத் தொடர்ந்து, காசநோய் ஒழிப்பதில் இந்தியா பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் போது ஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளேன் என்று கூறினார். ஆனால் பலரும் மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் மவுனம் காத்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். 

 

பாஜக தலைமையிலான ஆட்சி நடந்துவரும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாகக் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மணிப்பூருக்குச் சென்றார். அந்த சமயம், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டின் முன் குக்கி இன மக்களைக் காப்பாற்றக் கோரி குக்கி இனப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அதன்பிறகு அங்கு அமைதி நிலைமை திரும்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கலவரக்காரர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், மணிப்பூர் கலவரம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து இருந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக மணிப்பூர் சென்று இரு தரப்பினரிடையேயும் பேச்சு வார்த்தை நடத்தினார். இருப்பினும் அங்கி மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.  இதில், பல வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அம்மாநிலத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் ரஞ்சன் சிங் வீட்டின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.  பின்னர் தொங்ஜு என்ற இடத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளனர். 

 

“இன்னொரு மன்கிபாத் மணிப்பூர் பற்றி மௌனமாக முடிந்துள்ளது. பேரிடர் மேலாண்மையில் சிறந்த திறனைப் பற்றி பெருமை பேசும் பிரமர் மோடி, முழுக்க மனிதனால் நடக்கும் மணிப்பூர் பேரிடர் பற்றி என்ன நினைக்கிறார். இன்னமும் அவரிடம் இருந்து அமைதிக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. பிஎம் கேர் நிதியைத் தணிக்கை செய்யாதது போல், மணிப்பூரைப் பற்றி பிரதமர் மோடி கவலைப்படாமல் இருப்பது சந்தேக கேள்வியை எழுப்புகிறது” எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.  இப்படி மணிப்பூர் மாநிலமே பற்றி எறியும் சூழலில் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் அது தொடர்பாகப் பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் இருந்தது பலரும் ஏமாற்றியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கிய வன்முறை; மணிப்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Incident at CRPF soldiers in Manipur

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்துக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் 2வது கட்டத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குக்கி இனக்குழு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்களை, அங்கிருந்த மற்ற வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.