Skip to main content

‘டிஜிட்டல் மயமான இந்தியா...’ - ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

pirmeminister modi says digitization changed in india at g 20 summit  

 

ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜி20 அமைப்பின் மாநாடு கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது. இதில் உறுப்பு நாடுகளின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

அப்போது அவர் பேசுகையில், "கொரோனா தொற்று காரணமாக உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ரசிய - உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் அத்தியாவசியப் பொருட்களான உணவு, எரிபொருள், உரம் ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த சூழலில் வாரணாசி மாநாட்டில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் மக்களுக்கு நல்ல பலன் அளிக்கும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நமது செயல்பாடுகள் நேர்மையாக இருக்க வேண்டும். நம்முடைய முயற்சிகள் அனைவருக்கும் பலன் அளிப்பதாக இருக்க வேண்டும். இந்தியாவில் முன்னேறத் துடிக்கும் மாவட்டங்கள் என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 100க்கும் மேற்பட்ட பின் தங்கிய மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த மாவட்டங்கள் இப்போது நமது நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளன.

 

ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள், முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து தங்களது நாடுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். இந்தியாவில் டிஜிட்டல் மயத்தால் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம். எங்களது அனுபவங்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். இந்தியாவில் ஆறுகள், மரங்கள், மலைகள்,  இயற்கை என அனைத்திற்கும் மரியாதை செலுத்தி வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகிறோம். கடந்த ஆண்டு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளருடன் இணைந்து லைஃப் இயக்கத்தைத் தொடங்கி வைத்தேன். இதன் மூலம் பருவ நிலை மாற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்ட வளர்ச்சி இலக்குகளை அடைய பாலின சமத்துவம், மகளிருக்கு அதிகாரமளித்தல் அவசியம்.

 

இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன் நின்று விடவில்லை. அதையும் தாண்டி பெண்கள் தலைமை தாங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இந்தியாவில் வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான முகவர்களாக பெண்கள் திகழ்கின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை ஜி20 அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பின்பற்ற வேண்டும். மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் புனித தலமான வாரணாசி நகரை சுற்றிப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் வாரணாசியின் எழுச்சியை தங்களால் உணர முடியும். இது என்னுடைய பாராளுமன்றத் தொகுதி என்பதால் உரிமையுடன் இதைக் கூறுகிறேன். கங்கை ஆரத்தியை காணுங்கள். சாரநாத்தையும் காணுங்கள். இவை உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும்" என உரையாற்றினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.