Skip to main content

"மோடி மற்றும் அமித்ஷாவிடம் இதனை கேட்க விரும்புகிறோம்" - ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

rahul gandhi

 

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.

 

இந்தநிலையில், நேற்று (27.07.2021) எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதன்தொடர்ச்சியாக இன்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

இந்தச் செய்தியாளர் சந்திப்பில், ராகுல் காந்தி பெகாசஸ் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்ததோடு, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குத் தாங்கள் இடையூறு செய்யவில்லை எனவும், தாங்கள் கடமையைத்தான் செய்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது, “நாங்கள் ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறோம். இந்திய அரசு பெகாசஸை வாங்கியதா இல்லையா? அரசு தனது சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதா? பெகாசஸ் குறித்து அவையில் எந்த விவாதமும் நடைபெறாது என அரசாங்கத்தால் எங்களுக்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாட்டின் இளைஞர்களிடம் இதனைக் கேட்க விரும்புகிறேன். நரேந்திர மோடி ஜி தொலைபேசிக்கு ஒரு ஆயுதத்தை அனுப்பியுள்ளார். இந்த ஆயுதம் எனக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகவும் பல தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ஏன் அவையில் விவாதிக்கப்படக்கூடாது?

 

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நாங்கள் இடையூறு செய்கிறோம் என கூறப்படுகிறது. நாங்கள் அவையை இடையூறு செய்யவில்லை. நாங்கள் எங்கள் கடமைகளைத்தான் நிறைவேற்ற விரும்புகிறோம். இந்த ஆயுதம் (பெகாசஸ்) இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பயங்கரவாதிகள் மற்றும் தேச விரோதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படிருக்க வேண்டும். இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எதிராக இந்த ஆயுதத்தை (பெகாசஸ் ஸ்பைவேர்) ஏன் பயன்படுத்தினீர்கள் என நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவிடம் கேட்க விரும்புகிறோம்.

 

எங்களைப் பொறுத்தவரை, பெகாசஸ் என்பது தேசியவாதம் மற்றும் தேசத்துரோகம் தொடர்பான விஷயம். இந்த ஆயுதம் ஜனநாயகத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை இது தனியுரிமை தொடர்பான விஷயம் அல்ல. நான் அதை தேச விரோத செயலாகவே பார்க்கிறேன். நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர்.”

 

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், "தேசிய பாதுகாப்பு மற்றும் வேளாண் சட்ட பிரச்சனைகளில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளது. இனியும் ஒற்றுமையாக இருக்கும்" என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.