Skip to main content

"உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது" - உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் வரவேற்பு!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021


 

rahul gandhi

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைப்பேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஃப்ரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்திய உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

 

இந்தநிலையில் இன்று பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது; கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, பெகாசஸ் பிரச்சனையை நாங்கள் எழுப்பினோம். இன்று உச்சநீதிமன்றம் தனது கருத்தைக் கூறி நாங்கள் சொல்வதை ஆதரித்துள்ளது.

 

நாங்கள் போராடினோம். ஆனால் பதில் கிடைக்கவில்லை. நாங்கள் பாராளுமன்றத்தை முடக்கினோம். அப்போதும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. இப்போது எங்கள் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் கேள்விகள் அப்படியே இருக்கின்றன.

 

பெகாசஸ் பயன்பாட்டை அங்கீகரித்தவர் யார்? பெகாசஸை வாங்கியவர் யார்? பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார் யார் தாக்கப்பட்டார்கள்? வேறு எந்த நாடும் நமது மக்களை பற்றிய தரவுகளை வைத்துள்ளதா? அவர்களிடம் என்னென்ன தகவல்கள் உள்ளன ?. இவைதான் நாங்கள் எழுப்பிய அடிப்படை கேள்விகள்.

 

பெகாசஸ் இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி. இந்த விவகாரத்தை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரிய நடவடிக்கை. இதன்மூலம் உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கண்டிப்பாக பாஜக அந்த விவாதத்தை விரும்பாது. ஆனால் நாங்கள் விவாதம் நடத்த வலியுறுத்துவோம். இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது, நீதிமன்றம் அதை முன்னெடுத்துச் செல்லும்.ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த அழுத்தம் கொடுப்போம்.

 

முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள், பாஜக அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது. பெகாசஸ் மூலம் பெறப்பட்ட தகவல்களைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் பெறுகிறார்களா? தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு விவரங்கள் பிரதமரிடம் சென்றால் அது குற்றச் செயலாகும்.

 

தேசத்தின் பிரதமர் மற்றொரு தேசத்துடன் கூட்டுச் சேர்ந்து, தலைமை நீதிபதி, முன்னாள் பிரதமர்கள் மற்றும் முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட தனது சொந்த குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தினால், அது தேசத்தின் மீதான தாக்குதல்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.