
பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த இரண்டு இந்திய ஊழியர்கள் மயமான விவகாரம் தொடர்பாகப் பேச இந்தியாவுக்கான பாகிஸ்தானின் பொறுப்பு தூதர் இன்று இந்திய வெளியுறவுத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
இன்று காலை பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த இரு இந்திய ஊழியர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்லாமாபாத்தில் பணியிலிருந்த இந்த இரண்டு இந்திய ஊழியர்களும் திங்கள்கிழமை காலை சில வேலைகளுக்கு வெளியே சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்வதற்கு முன்னரே மாயமாகி உள்ளனர். மேலும், அவர்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காகப் பாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியது. இதனை ஏற்று இன்று மதியம் வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு வந்த பாகிஸ்தான் பொறுப்பு தூதர் சயீத் ஹைதர் ஷா, இந்திய அதிகாரிகளைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இந்தியத் தூதரக ஊழியர்கள் பாகிஸ்தானில் மாயமானது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.