Skip to main content

நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்டவர் கொலை- விசாரணை தீவிரம்! 

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

nupur sharma speech incident national investigation agency chief meet union minister

 

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதியில் நடைபெற்ற மருந்துக் கடைக்காரர் கொலை வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் தையல்காரர் கொல்லப்பட்டது தொடர்பான, வழக்கு விசாரணையின் விவரங்களையும், அவர் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

தொலைக்காட்சி விவாதத்தில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நுபுர் சர்மாவின் செயலுக்கு எதிராக உச்சநீதிமன்றமும் கருத்தைப் பதிவு செய்துள்ளது. 

 

இந்தச் சூழலில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட மகாராஷ்டிரா மாநிலம், அமராவதியைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரர் உமேஷ் போன்டே, கடந்த ஜூன் மாதம் 21- ஆம் தேதி அன்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கால்நடை மருத்துவர் யூசுப் கான், கொலை செய்யப்பட்ட உமேஷ் போன்டேவின் நண்பர் என்பது தெரிய வந்துள்ளது. 

 

இந்த நிலையில், வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான இஃர்பான் கானை காவலில் எடுத்து விசாரிக்க ஜூலை 7- ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஆறு பேர் அமராவதி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் அமராவதி சென்று விசாரித்து வருகின்றனர். 

 

உதய்ப்பூர் தையல்காரர் கொலைக்கும், இதற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதால், இவ்விரு கொலைகளில் வெளிநாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த தேசிய புலனாய்வு முகமை தலைமை இயக்குநர் இவ்விரு கொலைகள் தொடர்பான விசாரணை விவரங்களை எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.