Skip to main content

பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்; எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆலோசனை

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

No-confidence motion on PM Modi Advice to opposition MPs

 

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், இரு அவைகளிலும் உடனடியாக இதுகுறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மதியம் இரு அவைகளும் கூடிய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து உடனே இரு அவைகளிலும் விசாரிக்க வேண்டும் என மீண்டும் எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதே போன்ற நிலைமை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாளான நேற்றும் நீடித்தது.

 

மேலும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று அறிவித்து இருந்தார். இதையடுத்து, இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு  மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்தும், ஆம் ஆத்மி எம்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் நேற்று முதல் விடிய விடியத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

 

இந்நிலையில், நான்காம் நாளான இன்று  காலை இரு அவைகளும் கூடின. அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி மக்களவை மதியம் 2 மணி வரையிலும், மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, அவரை நாடாளுமன்றத்தில் பேச வைக்க இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாகப் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சிமன்றக்குழு இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்பாக வியூகங்கள் வகுப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்