Skip to main content

‘தொன்மையான தமிழ் மொழியை மத்திய அரசு போற்றி ஆதரிக்கும்’- நிர்மலா சீதாராமன்

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து 31.5.2019 அன்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டது.  
 

nirmala sitharaman

 

 

இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https:\\mhrd.gov.in என்ற இணையதளத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ள புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 

இந்நிலையில் பலரும் இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று ட்விட்டரில் தமிழ்நாடு ஹிந்தி திணிப்புக்கு எதிராக உள்ளது என்ற ஹேஸ்டேகும் ட்ரெண்டானது. பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
 

இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்திட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” “#EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்ய அரசு முன்னின்று ஆதரிக்கும்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்