Skip to main content

தங்க கடத்தல் ஸ்வப்னாவின் ஜாமீனுக்கு என்.ஐ.ஏ. கடும் எதிர்ப்பு!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

Gold smuggling beauty Swapna! NIA granted bail Strong opposition!

 

கேரளாவிலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் நடந்த விவகாரம் கடந்த ஆண்டு கேரளாவை உலுக்கியது. தூதரகத்தில் பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கினை தேசியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட 3 தரப்பும் விசாரித்துவருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகிவருகின்றனர். கடந்த பிப்ரவரியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கருக்கு ஜாமீன் கிடைத்தது. ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டவர்கள் ஓராண்டாக சிறையில் இருக்கின்றனர். அமலாக்கம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஏற்கனவே ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால், என்.ஐ.ஏ. எனப்படும் தேசியப் புலனாய்வு அமைப்பு தொடந்த வழக்கில்  ஜாமீன் மறுக்கப்பட்டே வருகிறது.

 

இந்த நிலையில், ஜாமின் வழங்கக் கோரி  மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தை நேற்று (16.07.2021) அணுகினார் ஸ்வப்னா. ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த அவரது மனுவில்,  "என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிவே இல்லாமல் நீடிக்கிறது. விசாரணை என்ற பெயரில் ஒரு வருடமாக சிறையில் இருக்கிறேன். இதே தங்கக் கடத்தல் வழக்குடன் தொடர்புடைய சுங்கத்துறை மற்றும் பணமோசடி வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே என்.ஐ.ஏ. தொடர்ந்த வழக்கிலும் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

வழக்கு விசாரணையின்போது என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சரித், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் மிக முக்கியமானவர்கள். கடத்தலின் மூளையாக செயல்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் இவர்களின் தங்கக் கடத்தல்களால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை நாங்கள் நிரூபித்துள்ளோம். கூட்டுச் சதியிலும் இவர்களுக்குத் தொடர்பிருக்கிறது.  ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 2019 நவம்பர் முதல் 2020 ஜூன் வரை 167 கிலோ தங்கத்தைக் கடத்தியுள்ளனர்.

 

பணப்பரிவர்த்தனைகள் மற்றும் கடத்தல் தொடர்பான ஆதாரங்களைப் பெறுவதற்காக பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இந்த நிலையில், இவர்களை ஜாமீனில் விடுவிப்பது விசாரணையைத் தீவிரமாக பாதிக்கும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரிய இடங்களில் ஸ்வப்னாவுக்கு தொடர்புகள் உள்ளன. ஆதாரங்களை அழிக்கவும், சாட்சியங்களைக் கலைக்கவும் வாய்ப்புண்டு. அதனால் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று கடுமையாக எதிர்த்தனர். இதனையடுத்து ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கை ஜூலை 29க்கு ஒத்திவைத்துள்ளது கேரள உயர் நீதிமன்றம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.