Skip to main content

அடுத்த சில வாரங்கள் முக்கியம் - இந்தியர்களுக்கு சௌமியா சுவாமிநாதனின் அறிவுரை!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

SOWMIA SWAMINATHAN

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனையொட்டி நாட்டில் கரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள்  தெரிவித்து வருகின்றனர். ஒமிக்ரான் பாதிப்பால் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், கரோனா மூன்றாவது அலை தொடர்பாக இந்தியர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்தியாவில் ஒமிக்ரானால் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது: ஒமிக்ரான் அதிகரித்து வருவதால் அடுத்த சில வாரங்கள் முக்கியமானதாக இருக்கும். பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பே இருக்குமென்பதால், பீதியடையாமல் கரோனா பரவலை கையாள வேண்டும்.

 

கரோனா பரிசோதனை நடத்துங்கள், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துங்கள், தேவையற்ற மருந்துகளைத் தவிருங்கள், முகக்கவசங்கள் அணியுங்கள், முடிந்தால் வீட்டில் இருந்தே பணியாற்றுங்கள், கூட்டத்தைத் தவிருங்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள், அரசாங்கத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள். இவ்வாறு சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனாவுக்கு எதிராக மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி தேவைப்படலாம் - உலக சுகாதார நிறுவனம்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

WORLD HEALTH ORGANISATION

 

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா  அலைக்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே பல்வேறு நாடுகள் கரோனா பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் டோஸ்களை செலுத்தி வருகின்றனர். இஸ்ரேல், சிலி உள்ளிட்ட நாடுகள் நான்காவது டோஸ் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தத் தொடங்கியுள்ளன.

 

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு, கரோனாவுக்கு எதிராக மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி தேவைப்படலாம் என கூறியுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு கூறியுள்ளதாவது: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவிலான பாதுகாப்பு தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய,தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை மேம்படுத்த வேண்டியிருக்கலாம்.

 

தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டிய தேவையைக் குறைக்கும் பொருட்டு தடுப்பூசிகள் பரந்த, வலுவான மற்றும் நீடித்த நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்த வேண்டும். தற்போதுள்ள தடுப்பூசிகளை பூஸ்டர்களாக மீண்டும் மீண்டும் செலுத்துவது நிலையானதாகவோ, இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு  உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு கூறியுள்ளது.

 

 

Next Story

ஒமிக்ரான் பரவலால் ஆபத்தான புதிய வகை கரோனா உருவாகலாம் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

omicron

 

தென்னாப்பிரிக்கா நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது. ஸ்பைக் ப்ரோட்டினில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளுடன் மொத்தமாக 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளைக் கொண்டுள்ள இந்த ஒமிக்ரான், இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் என உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கரோனா அலையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தநிலையில் உலகமெங்கும் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பாதிப்பு, ஆபத்தான புதிய வகை கரோனாவை உருவாக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அவசரநிலை அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் இதுதொடர்பாக கூறியுள்ளதாவது; ஒமிக்ரான் எவ்வளவு அதிகமாக பரவுகிறதோ, எவ்வளவு அதிகமாக நகலெடுத்துக்கொள்கிறதோ, அந்தளவிற்கு புதிய கரோனா திரிபு  உருவாக்க வாய்ப்புகள் அதிகம்.

 

இப்போது ஒமிக்ரான் ஆபத்தானது, அது மரணத்தை ஏற்படுத்தலாம். அதன் தீவிரம் டெல்டாவை விட சற்று குறைவாக இருக்கலாம், ஆனால் அடுத்த திரிபு எவ்வாறு இருக்கும் என யாரால் சொல்ல முடியும்?. ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்கும்போது அது கடுமையாக பாதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களின் எண்ணிக்கையும், இறக்க வாய்ப்புள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவ்வாறு கேத்தரின் ஸ்மால்வுட் கூறியுள்ளார்.