Skip to main content

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிப்பு!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

New date for Puducherry local body elections announced!

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பினை கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 

 

அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் குளறுபடி இருப்பதைச் சுட்டிக்காட்டி முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குளறுபடியான இடஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்த நீதிமன்றம், இடஒதுக்கீடு குளறுபடிகளை சரிசெய்து ஐந்து நாட்களுக்குள் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டது.

 

அதையடுத்து தேர்தல் ஆணையம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இட ஒதுக்கீடு வழங்கும் ஆணையை ரத்து செய்ததோடு, திருத்தப்பட்ட ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டு, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பையும் திரும்பப் பெற்றது.

 

இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ராய் பி. தாமஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் புதுச்சேரியில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

முதற்கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 11ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி அக்டோபர் 18ஆம் தேதி நிறைவடையும். நவம்பர் 2ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இரண்டாவது கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி அக்டோபர் 22ஆம் தேதி நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

 

மூன்றாவது கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கும், கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் அக்டோபர் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி அக்டோபர் 29ஆம் தேதி நிறைவடைகிறது. நவம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்னர் நவம்பர் 17ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

 

இந்த உள்ளாட்சி தேர்தலில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 222 ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 930 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

 

இந்த தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்குவருகிறது. புதுச்சேரி மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் (http://sec.py.gov.in) அனைத்து விவரங்களும் உள்ளன. இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் பார்க்கலாம். அனைத்து நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய சட்ட விதி அளித்துள்ள அதிகாரத்தின்படி செய்யப்படுகின்றன." இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனிடையே மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்து, 2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது பின்பற்றப்படும் நடைமுறைகள்படி புதிய இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டது. இதில் பிற்படுத்தப்டோர், பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு சரிவர கையாளப்படவில்லை என்பதால் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைக் கருத்தில்கொள்ளாத மாநில தேர்தல் ஆணையம், புதிய இடஒதுக்கீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து இன்று (09.10.2021) கூட்டம் நடத்துகின்றனர். 

 

இதேபோல் முரண்பாடான இடஒதுக்கீடு முறை வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதலமைச்சர், சட்டப்பேரவை தலைவரிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதன் பேரில் புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் எடுக்கப்படும் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையரைச் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.