
இந்தியாவில் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 6 பேருக்கு உருமாறிய கரோனா உறுதியான நிலையில், மேலும் 14 பேருக்கு உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு உருமாறிய கரோனா கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 10 ஆய்வகங்களில் 107 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் 20 பேருக்கு உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், கரோனா பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தி, கரோனா உறுதியான மாதிரிகளை மாநில அரசுகள் கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூர், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.