Skip to main content

2024 நாடாளுமன்ற தேர்தல்; பிரதமர் வேட்பாளர் யார்? - ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

modi - nithish kumar

 

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக இருந்து வருகிறார். இந்த சூழலில் அண்மையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சில நடவடிக்கைகளால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

மத்திய பாஜக அரசு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதில்லை என கொள்கை முடிவெடுத்துள்ளதாக அறிவித்த பிறகும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும் அதே கோரிக்கையை வலியறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அண்மையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில் பீகார் மாநில கட்சிகள் பிரதமரை சந்தித்தன. அதேபோல் பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தவும், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் மத்திய அரசு மறுத்து வந்த நிலையில், நிதிஷ்குமார், பெகாசஸ் குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றதோடு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும் எனவும் தெரிவித்தார். கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவரே இவ்வாறு கூறியது, பாஜகவிற்கு நெருக்கடியாக கருதப்பட்டது.

 

இந்தநிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், ”நிதிஷ்குமாருக்கு பிரதமராவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் இருக்கிறது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் முதன்மை பொது செயலாளரும் தேசிய செய்தி தொடர்பாளருமான கே சி தியாகி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருங்கிணைப்பு குழு வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

இதனால் கூட்டணிக்குள் சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த கே சி தியாகி, 2024 பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்துள்ளார். அதேநேரத்தில் ஒருங்கிணைப்பு குழு வேண்டும் என்ற கோரிக்கையை கே சி தியாகி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "தேசிய ஜனநாயக கூட்டணி சீராக செயல்படுவதை உறுதி செய்ய, தேசிய அளவில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார். மேலும் உத்தரபிரதேச தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் தனித்து போட்டியிடுவோம் எனவும் கே சி தியாகி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நான் என்ன பாகிஸ்தான் குடிமகனா? - துரை வைகோ ஆவேசம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 Am I a citizen of Pakistan? - Durai vaiko 

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே மதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது. பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை  ஒத்திவைத்தனர். மேலும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு மீது புதன் கிழமை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில்.. “இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் ஒதுக்க முடியாது” என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து மதிமுகவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. இது மதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை எனச் சொல்லப்பட்டது. முன்னதாக, இன்று காலை திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ, “பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தான் கூறி உள்ளது. நீதிமன்றம் கூறவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது எங்கள் வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்து பம்பரம் சின்னத்தை கேட்பார்கள். சின்னம் விவகாரத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்றால் அவரின் சின்னம் என்ன என்பதை தேடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க 24 மணி நேரம் கூட தேவைப்படாது. 

பா.ஜ.கவை உண்மையாக எதிர்க்கும் அணியாக தி.மு.க அணி இருக்கிறது. திருச்சியில் அந்த அணி சார்பில் ம.தி.மு.க போட்டியிடுகிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்கள். ம.தி.மு.க, விசிக மட்டுமல்ல நாம் தமிழர் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கவில்லை. பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக பா.ஜ.கவிற்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. 

அதிமுகவினர் பதட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சின்னமே முடங்க வாய்ப்பிருக்கிறது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எனக்கு வாழ்த்து கூறுவதை போல் பேசியுள்ளார். எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பா.ஜ.கவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை கொண்டு ஏதாவது ஒரு விதத்தில் இடைஞ்சல் கொடுத்து வருகிறார்கள். என்னை வெளியூர் வேட்பாளர் என்கிறார்கள். நான் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவன் தான். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்துள்ளேன்” என்றார்.  

1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதிமுக, 1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6% வாக்குகள் மட்டுமே பெற்றதால் அந்த கட்சி அங்கீகாரம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார்.