Skip to main content

"மரண தண்டனை கிடைத்தால் மகிழ்ச்சி" - மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளம்பெண்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

mumbai taj hotel incident related issue talks about devika natwarlal 

 

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை சேர்ந்த அமெரிக்கர் டேவிட் ஹெட்லி மும்பை வந்து செல்வதற்காக அமெரிக்காவில் குடியுரிமை சேவை அளித்து வரும் தஹாவூர் ராணா (வயது 62) என்பவர் உதவியுள்ளார். கனடா நாட்டு குடியுரிமை பெற்ற இவர் அமெரிக்காவில் குடியுரிமை சேவை அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர் என்பதால் இவர் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது அமெரிக்காவில் உள்ள சிறையில் உள்ளார். இவரை மும்பை தாக்குதல் வழக்கில் விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்ததையடுத்து தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

மும்பை பயங்கரவாத  தாக்குதலின் போது சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தேவிகா நட்வர்லால் என்ற 9 வயது சிறுமியின் வலது காலில் குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில்  உயிர் பிழைத்த சிறுமிக்கு தற்போது 23 வயதாகிறது. இந்நிலையில் தஹாவூர் ராணாவை இந்தியா கொண்டு வருவது பற்றி தேவிகா நட்வர்லால் கருத்து தெரிவிக்கையில், "மும்பை பயங்கரவாதத்  தாக்குதலுக்கு உள்ளானேன். என் கண் முன்னால் பலர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் நான் மிக குறைந்த வயது கொண்ட சாட்சியாக இருந்தேன்.

 

இந்த தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா இந்தியா கொண்டு வரப்படவுள்ளதை வரவேற்கிறேன். அவருக்கு மரண தண்டனை கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தஹாவூர் ராணாவுக்கு அளிக்கப்படும் தண்டனையை பார்த்து வேறு யாரும் பயங்கரவாத செயலில் ஈடுபட முயற்சி செய்யக் கூடாத அளவிற்கு இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்