
நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் வரும் திங்கள் கிழமை (18ம் தேதி) துவங்குகிறது. 18 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், நுபுர் ஷர்மா விவகாரம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.
நேற்று, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட சொற்கள் என ஒரு பட்டியலை மக்களவைச் செயலகம் புத்தகமாக வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள சொற்கள்; ‘வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக் கேட்பு ஊழல், கரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பிக்கள் போராட்டங்களில் ஈடுபட தடை விதித்து நாடாளுமன்ற மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வரும் இரண்டு நாட்களில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த தடை உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை கொடுக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)