Skip to main content

கிரண்பேடியை எதிர்த்து அமைச்சர், எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்!  

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

 Minister, MLAs sit-in struggle against Kiranpedi!

 

புதுச்சேரி மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிராகச் செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும், மத்திய அரசு கிரண்பேடியை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆளும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், கடந்த 8- ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தை முடித்துக்கொண்டார். அதேசமயம் நேற்று இரவு முதல் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடங்கினார்.          

 

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2020-21 நிதியாண்டில் ரூ.18 கோடியில் அடிப்படை வசதி பணிகள் மேற்கொள்வதற்கான கோப்பு சமர்ப்பிக்கப்பட்டதில் ரூ.6 கோடி மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 கோடியை அனுமதிக்க வேண்டும், ஏழை ஆதி திராவிடர்களுக்கான வீடு கட்டும் மானியம் 4 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்துதல், ஏழைப்பெண்கள் திருமண உதவித்தொகை ரூ.75,000-த்தினை ஒரு லட்சமாக உயர்த்துதல், கிருமாம்பாக்கத்தில் பல்நோக்கு திருமண மண்டப கட்டுமானத்திற்கான நிலுவையில் உள்ள பில்கள் ரூ.5 கோடிக்கு ஒப்புதல், உண்டு உறைவிடப் பள்ளி கட்டுமான பணிக்கு நிதி வழங்கல், முதியோர் பென்ஷன் திட்டத்தின் கீழ் 10,000 கூடுதல் பயனாளிகளைச் சேர்த்தல், புதுச்சேரி துறைமுகத்தின் மேம்பாட்டிற்காக CSS நிதி மற்றும் மத்திய அரசின் ரூ.305 கோடி நிதி அளித்தல், சட்டரீதியான நிலுவைத் தொகை தீர்வை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கான மானிய உதவி, ஸ்பின்கோவுக்கு கூடுதல் மானியம் ஒதுக்கீடு, சுதேசி, பாரதி மற்றும் AFT ஆலைகளை மீண்டும் இயக்குதல், கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் நிலுவைகள் வழங்குல், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபட்ட மாதங்களுக்கான இலவச அரிசி விநியோகம் / நேரடி பணப்பரிமாற்றம், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பாட்கோ நிறுவனங்களுக்கு கல்வி மற்றும் பிற கடன்கள் வழங்கல், நியாயவிலைக் கடை ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தல், பாப்ஸ்கோ நிறுவனம் இயங்க மானிய உதவி அளித்தல் உள்ளிட்ட தனது துறை தொடர்பான நிலுவையில் உள்ள 15 கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை சட்டசபையில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து நேற்று இரவு உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினார்.

 

 Minister, MLAs sit-in struggle against Kiranpedi!

 

அவரை சந்தித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏவி.சுப்பரமணியம், அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோரும் தத்தமது சட்டமன்றத் தொகுதி கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் கந்தசாமியுடன் இன்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களை முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 

 

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது சட்டசபை வளாகத்துக்குள்ளேயே அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.