டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த 150 பேர் மீது மகாராஷ்ட்ரா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது. மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.அந்த வகையில் டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த 150 பேர் மீது மகாராஷ்ட்ரா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் நடந்த சிறப்பு மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்தோனேசியா, தாய்லாந்து, உட்பட உலகின் பல இடங்களிலிருந்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் வந்திருந்தனர்.இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் நூற்றுக் கணக்கானவர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள சூழலில், தப்லீக் ஜமாஅத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்,டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து 1916 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு மகாராஷ்ட்ர அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.ஆனால், இதனை மதிக்காமல், மாநாட்டுக்குச் சென்றதை மறைத்த 150 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.