Skip to main content

"எங்கள் இயக்கம் தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளது" - காசிப்பூர் எல்லையில் இருந்து வெளியேறிய ராகேஷ் திகைத்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

rakesh tikait

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த விவசாயிகளின் போராட்டம் அண்மையில் வெற்றியுடன் நிறைவடைந்தது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு, போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக உத்தரவாதம் வழங்கியுள்ளது.

 

மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிடுவதாகவும், உத்தரவாதம் அளித்துள்ள மத்திய அரசு, அவற்றை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் எனவும் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், போராட்டக் களத்திலிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கினர்.

 

ஏற்கனவே சிங்கு மற்றும் திக்ரி எல்லைப்பகுதியிலிருந்து விவசாயிகள் வெளியேறிய நிலையில், தற்போது காசிப்பூர் எல்லையில் மீதமிருந்த விவசாயிகளும் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தலைமையில் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டனர். அப்போது பேசிய ராகேஷ் திகைத், தங்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாவும், அது திரும்பப்பெறப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "எங்களுடன் இருந்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். லங்கார்களை நடத்தியவர்களுக்கும், எங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுவந்த கிராம மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்ற பிறகு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. எங்கள் இயக்கம் தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளது. திரும்பப் பெறப்படவில்லை" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.