
இங்கிலாந்து நாட்டின் மன்னராக, கடந்த 2022ஆம் ஆண்டுசார்லஸ் III பதவியேற்றார். இவர் தனது மனைவி கமிலாவுடன் தனிப்பட்ட முறையில் கடந்த 26ஆம் தேதி பெங்களூருக்கு வந்திருந்தார். பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து சவுக்யா ஆரோக்கியா மையத்துக்கு சென்ற அவர்கள் இருவரும், இயற்கை மற்றும் ஆயுர்வேத முறையில் ஆரோக்கியத்துக்கான சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது.
மையத்தில் 3 நாட்கள் தங்கிருந்த இங்கிலாந்து மன்னரும், அவரது மனைவியும் காலை நேரங்களில் யோகா பயிற்சியில் ஈடுபட்டதாகவும், தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. நடைப்பயணம், இயற்கை விவசாயம் ஆகியவற்றை மேற்கொண்ட சார்லஸும், கமிலாவும் இன்று காலை இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து மன்னர், பெங்களூருக்கு வந்ததாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு சவுக்யா மையத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தந்து 71வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனால், இந்த மையத்தின் தலைவரான ஈசாக் மதாய் என்பவர், இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.