Skip to main content

தீண்டாமைக்குள்ளான அறநிலையத்துறை அமைச்சர்! 

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 

Kerala Minister K Radhakrishsnan temple issue

 

கேரளா மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் சி.பி.எம். கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த சி.பி.எம். கட்சியில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த கே. ராதாகிருஷ்ணன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், அறநிலையத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவரை அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பில் அமர்த்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள் குவிந்தன. 

 

இந்நிலையில், சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் சாதிய பாகுபாட்டால் கோயில் ஒன்றில் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதனை கடந்த ஞாயிறு அன்று கோட்டயத்தில் நடைபெற்ற பாரதிய வேலன் சேவை சங்கத்தின் நிகழ்ச்சியில் பேசியபோது வெளிப்படுத்தினார். 

 

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “சாதிய அமைப்பால் உருவாகியுள்ள மனநிலையை மாற்றுவது சாதாரண காரியம் அல்ல. அது மனதில் கரையாக படிந்துள்ளது. மேலும், அதனை துணியில் படிந்துள்ள கரை போல எளிதில் நீக்கமுடியாது. சமீபத்தில் நான் ஒரு கோவில் விழாவிற்கு சென்றிருந்தேன். அங்குள்ள பூசாரி கையில் விளக்குடன் வந்தார். அதனை என்னிடம் கொடுத்து தீபம் ஏற்ற சொல்வார் என நினைத்தேன். ஆனால், அவர் என்னிடம் கொடுக்காமல் அவராகவே தீபம் ஏற்றினார். இது ஒரு சடங்கு, சம்பிரதாயம் என நினைத்து அப்பொழுது நான் எந்த இடையூறும் செய்யவில்லை. மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும் நான் விரும்பவில்லை. இதற்கு எந்தவித சட்ட நடவடிக்கையும் நான் மேற்கொள்ளப் போவதில்லை. கேரள மக்கள் ஒவ்வொருவரும் இந்த சமூக பாகுபாடு குறித்த தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

 

இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “இது மாதிரியான பாகுபாடுகளுக்கு நமது மாநிலம் முற்றிலும் எதிரானது. இருந்தும், கோவிலில் நடந்த சம்பவம் நம் மாநிலத்தில் நடந்துள்ளது என்பதனை நம்ப முடியவில்லை. நான் அமைச்சரிடம் இது பற்றி பேசவில்லை. ஆனால், இதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என முதல்வர் பேசினார்.

 

இந்த நிகழ்வுக்கு பையனூர் எம்.எல்.ஏ. மதுசூதன் இந்த சாதிய பாகுபாட்டை கண்டித்துள்ளார். அவர் பேசுகையில், “இச்சம்பவம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மேலும், இது ஒரு முறையான செயலும் இல்லை” என காட்டமாக விமர்சித்துள்ளார். பல கண்டனங்கள் எழுந்தாலும் கோவில் நிர்வாகம் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Extension of darshan time at Sabarimala

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு முக்கிய நிகழ்வாக கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுமார் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் நாளை (11.12.2023) முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

வழக்கமாக சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சபரிமலை நடை திறப்பு காரணமாகத் தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மருத்துவ மாணவியின் தற்கொலை விவகாரம்; வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
kerala Medical student's case; Shocking information released

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹ்னா (26) எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்துள்ளார். இதனையடுத்து, இவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலை படித்து வந்தார். மேலும், ஷஹ்னா தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார். 

இதற்கிடையே, ஷஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி ஷஹ்னாவுக்கு மருத்துவமனையில் இரவு பணி இருந்தது. ஆனால், அவர் பணிக்கு செல்லாமல் அறைக்குள்ளே தங்கியிருந்தார். இதனால், சந்தேகமடைந்த சக மாணவிகள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால், கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அங்கு ஷஹ்னா மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது, ஷஹ்னா நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது செலுத்தும் மயக்க ஊசியை தானே போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, ஷஹ்னா தங்கியிருந்த அறையை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

அந்த சோதனையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஷஹ்னா தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர். அந்த கடிதத்தில், ‘இந்த உலகத்தில் அன்பிற்கு எந்த மரியாதையும் கிடையாது. எனது அப்பா போய்விட்டார். திருமணத்திற்கு வரதட்சணையாக கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார், ஷஹ்னாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அந்த விசாரணையில், ஷஹ்னாவுக்கும் அவருடன் வகுப்பில் படித்து வரும் ரூவைஸ் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இவர்களுக்குள் திருமணம் நடத்தி வைக்க இருவீட்டார்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், ரூவைஸ் மற்றும் அவரது குடும்பத்தாரும், வரதட்சணையாக 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம், ஒரு ஆடம்பர கார் தர வேண்டும் என ஷஹ்னாவின் குடும்பத்தை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்கள் கேட்ட வரதட்சணையை ஷஹ்னாவின் குடும்பத்தார் தர முடியாத காரணத்தினால் அந்த திருமணம் நின்று போனது. 

இதனால் மனமுடைந்து போன ஷஹ்னா, கல்லூரிக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே முடங்கியிருந்தார். இதையடுத்து, அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து, நேற்று (07-12-23) போலீசார், ரூவைஸை அதிரடியாக கைது செய்தனர். தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மருத்துவ மாணவியின் தற்கொலை தொடர்பாக மாநில சிறுபான்மை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளது.