Skip to main content

ஹோட்டல் உரிமையாளர் துண்டு துண்டாக வெட்டி கொலை; பெண் உட்பட மூவர் கைது

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

kerala malappuram hotel owner and dismissed labour related incident 

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம்  திரூர் நகரைச் சேர்ந்தவர் சித்திக் (வயது 58). இவர் கோழிக்கோடு எலத்திபாலம் என்ற பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது மகன் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் சித்திக் வங்கிக் கணக்கில் இருந்து மிகப்பெரிய தொகை  ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.

 

இந்நிலையில் பாலக்காட்டை அடுத்துள்ள அகளி வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பிறகு போலீசார் அங்கு சென்று சூட்கேஸைத் திறந்து பார்த்துள்ளனர்.அப்போது போது அந்த சூட்கேஸில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம்  இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போன சித்திக் தான் இது என்று போலீசார் உறுதி செய்தனர்.

 

போலீசார் சந்தேகத்தின் பேரில் சித்திக்கின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுடன் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சித்திக்கின் ஹோட்டலில் வேலை செய்து வந்த  சிபில் (வயது 36) மற்றும் பர்ஹானா (வயது 34) ஆகியோர் மாயமாகி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை தீவிரமாக போலீசார் தேடி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில் இருப்பதை போலீசார் அறிந்து கொண்டனர். அதனை தொடர்ந்து  சாதுர்யமாக செயல்பட்டு இருவரையும் கைது செய்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சித்திக்கை கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். 

 

இவர்கள் இருவரும் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "கடந்த 18ஆம் தேதி ஓட்டல் உரிமையாளர் சித்திக் எங்கள் இருவரையும் வேலையில் இருந்து நீக்கி விட்டார். அதனால் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்து வந்தோம். மேலும் அவரிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில் கடந்த 23 ஆம் தேதி சித்திக்கை கடத்தி கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றோம். பின்னர் அங்கு வைத்து அவரை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு, துண்டாக வெட்டினோம். பின்னர் அவரது உடலை சூட்கேசில் வைத்து அகளி வனப்பகுதியில் வீசி சென்றோம்" என தெரிவித்தனர். இவர்களுக்கு உடந்தையாக பர்ஹானாவின் தம்பி ஆஷிக் என்பவரும் இருந்துள்ளார். இதையடுத்து அவரையும்  கைது செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் போது இவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்