Skip to main content

கொட்டிய கனமழை... கட்டியணைத்தபடியே உயிரிழந்த குழந்தைகள் - கேரளாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

kerala land slide

 

லட்சத்தீவு அருகே அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டயம் மாவட்டத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும், இடுக்கி மாவட்டத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதில் இடுக்கி மாவட்டம் கொக்காயர் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி இறந்த 28 வயது தாயும் 10 வயது மகனும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடியே உயிரிழந்துள்ளனர். ஒரு குழந்தை தனது தொட்டிலிலேயே உயிரிழந்துள்ளது. அதே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மூன்று குழந்தைகளான அம்னா (7 வயது), அஃப்சன் (8 வயது) மற்றும் அகியான் (4 வயது) ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடியே உயிரிழந்துள்ளனர். இது மீட்புக்குழுவினரின் இதயத்தை உலுக்கியுள்ளது. தாய், மகன் மற்றும் மூன்று குழந்தைகள் கட்டியணைத்தபடி உயிரிழந்துள்ளதைப் பார்த்த அவர்கள், அது தாங்க முடியாத காட்சி என தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே இடுக்கி மாவட்டத்தில் காணாமல் போன இரண்டு நபர்களைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகிறது. உயிரிழந்துள்ள நபர்களின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

 

இதற்கிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோட்டயம், கொல்லம், கண்ணூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மட்டும் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் சூழலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளதால், தற்போது மழை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று (18.10.2021) மாலை வரை கேரளாவில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. அதேபோல் கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரையில் மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆணையங்கள் களத்தில் பணியாற்றிவருவதாகவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.